சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும் சுமந்திரனுமே துரோகிகள்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

581 0

1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து சிங்கக் கொடியை ஏந்திப் பிடித்து கொண்டாடுவதாகவும் இதனால் அவர்களே துரோகிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை ஆதரித்து வதிரியில் நேற்று (04.02.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாற்றிய அவர்,

“பண்டா செல்வா ஒப்பந்தத்தையும் டட்லி செல்வா ஒப்பந்தத்தையும் சிங்களவர்கள் கிழித்து எறியவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் அரசியலைச் செய்துவரும் ஆபிரகாம் சுமந்திரன் அந்த இரு ஒப்பந்தங்களும் சமஸ்டி தீர்வினை வலியுறுத்திய ஒப்பந்தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்ததாகவும் மட்டக்களப்பு உப்புவெளியில்நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடு்டமொன்றில் கூறியிருக்கிறார்.

சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது. அவர் வாய் திறந்தால் கூறுவது முழுக்க பச்சைப் பொய். முதலில் அவர் சரித்திரத்தைப் படித்துவிட்டு வரவும். மாபெரும் தலைவர் தந்தை செல்வநாயகம் ஐயாவே பண்டா செல்வா ஒப்பந்தமும் ட்டலி செல்வா ஒப்பந்தமும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான ஆரம்பப் படி என்றுதான் கூறியிருக்கிறார். எங்களுடைய இலக்கு சமஷ்டி இந்த ஒப்பந்தங்கள் அதற்கான ஆரம்பப் படி என்றுதானே கூறியிருக்கிறார். ஆனால் இந்தச் சுமந்திரன் அவை யாவற்றையும் திரிவுபடுத்தி சிங்களங்கவர்களைக் காப்பாறும் நோக்கில் அவை சமஷ்டி என பொய்யுரைக்கிறார்.

“இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்திலேயே இலங்கையின் இறைமை மக்களுக்குரியாதாய் இருப்பதோடு பாராதீனப்படுத்த முடியாததும் பிரிக்கப்பட முடியாததுமாக இருத்தல் வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருக்க அதனை மக்கள் வாசிக்க மாட்டார்கள் வாசித்தலும் சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை புரிந்துகொள்ள முடியாது என்ற துணிவில் ஒற்றையாட்சியான இந்த இடைக்கால அறிக்கையை சமஷ்டி அரசியல் தீர்விற்கான இடைக்கால அறிக்கை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருபவர்தான் இந்தச் சுமந்திரன்.

தமிழ்க் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஆதரித்த கட்சி என்றும் இன்று திடீரென சமஷ்டியைக் கோருவதாகவும் கூட அவர் கூறிவருகின்றார். ஒற்றையாட்சி அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்பது என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டுவரவேண்டும் என்றும். இல்லை என்றால் சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்கள் தமிழரசாக பிரிந்து செல்ல பிரித்தானிய அரசாங்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் முதல் முதலாக கோரிக்கை வைத்தவர்களே காங்கிரஸ் கட்சிதான் என்பது சரித்திரம் தெரியாத ஆபிரகாம் சுமந்திரனுக்கு தெரியுமோ தொியாது.
அவ்வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ பொன்னபம்பலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு ரெலிக்கிறாம் அனுப்பிவிட்டு கப்பலிலே பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட இங்கு டி.எஸ். சேனநாயக்க இங்கிருந்த ஏனைய தலைவர்களை அரவணைத்து ஜீ.ஜீ மட்டுமே அந்தக் கோரிக்கையை வைக்கிறார் ஏனைய தலைவர்கள் அதற்கு இணங்கவில்லை எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் இங்குள்ளவர்களை இணங்கவைக்கிறார் அதனடிப்படையில் தான் ஒற்றையாட்சி நிறைவேற்றப்பட்டது. இதுதான் வரலாறு.

இதைவிட தற்போது இன்னொரு பெய்யையும் கட்டவிழ்த்து வருகின்றார். தமிழ்க் காங்கிரஸ் சிங்கக் கொடியை ஆதரித்த கட்சியாம். சிங்கக் கொடியிலே தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் அடையாளம் இல்லாத நிலையில் அதனை ஏற்க மாட்டோம் எனக்கூறி அதனை எதிர்த்த தலைவரும் ஜீ.ஜீ பொன்னம்பலமே. அதன் பின்புதான் அந்தச் சிங்கக் கொடியிலே தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளமாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்பும் நாங்கள் அந்தக் கொடியை ஆரரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. கையிலே அதனை ஏந்தி கொண்டாடியதும் இல்லை.

ஆனால் அந்த சிங்கக் கொடியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள்தான் அந்த சிங்கக் கொடியை கையிலே தூக்கிப் பிடித்தவாறு அதனை ஆதரிக்கிறோம் என்கிறனர்.
நாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்கவில்லை எனகூறி கடந்த எழுபது வருடமாக தமிழ்க் காங்கிரஸ் துரோகம் இளைத்துவந்ததாகக் கூறுகின்ற தமிழரசுக் கட்சி இன்று அதே சிங்கக் கொடியை சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து கரங்களிலே ஏந்தி கொண்டாடுகின்றதே அப்போ நீங்கள் யார்? எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் ?.

தமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக அரசியல் செய்வதாக இருந்தால் சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் எனக் கூறவேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்னொரு கதையும் கூறுபவர்களல்ல நாங்கள். எங்களைப் பொறுத்தவரையில் எழுபத்து ஏழாம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்றவரைக்கும் தமிழ்க் காங்கிரஸ் இந்த நாட்டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. இந்த நாட்டிலே பல குறைகள் இருந்தன. அதில் மாற்றுக் கருத்தில்லை. இது ஒரு ஐக்கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என செயற்பட்டுவந்தோம். ஆனால் 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடியையோ அங்கீகாரத்தையோ நிராகரிக்கவில்லை. நாமும் தமிழரசுக் கட்சியும் எமது வழிகளிலே பல முயற்கிகள் செய்தும் சிங்கள தேசம் அத்தனை முயற்சிகளையும் நிராகரித்த நிலையில்தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்றன. அதனைடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் பெற்றோம். அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை” – என்றார்.

Leave a comment