ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்

607 0

Kanaku_CIஆவணஞானி குரும்பசிட்டி  இரா. கனகரத்தினம் அவர்கள்  22-06- 2016 அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை அமைத்து தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழ்க் கல்வி  ஆகிய துறைகளில் உழைத்து  வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொடர்ச்சியாக  பல ஆண்டுகள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த வரும் தமிழ்ப்பற்றாளரும் ஆவணஞானி  என்னும் சிறப்புப்  பட்டத்தைப் பெற்றவருமான “குரும்பசிட்டி” இராகனகரத்தினம் 22ம் திகதி புதன்கிழமை இலங்கையின் கண்டி மாநகரில் காலமானார்  என்னும் சோகச் செய்தியை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  தலைமையகம் தனது கடமைகளில் ஒன்றாகக் கருதுகின்றது.

1934ம் ஆண்டு ஆவணி 1ம் திகதி பிறந்த குரும்பசிட்டி இரா .கனகதரத்தினம் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் தமிழர் வரலாறு பண்பாட்டு விழுமியங்களையும் சேகரிக்கும் தனது பணியை ஆரம்பித்து 2015ம் ஆண்டு அகதியாக தமிழகத்தில் திருச்சியில் வாழும் வரை ஓய்வு ஒழிச்சல் இன்றி தனது பணியை தொடர்ந்து  வந்தார்.

இவர் உலகத்தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு இயக்கம் அமைக்க பல முயற்சிகளை செய்து அருட்தந்தை வண தனிநாயகம் அடிகளார்  ஏ.கே.செட்டியார் பேராசிரியர்  சு.வித்தியானந்தன்  பேராசிரியர் சாலை இளந்திரையன்  போன்ற பெரியார்களுடன்   தொடர்புகளை   மேற்கொண்டு பேராசிரியர்  சா  லை இளந்திரையன் அவர்களின் விருப்பப்படி பாதுகாப்பை பண்பாடு என மாற்றி உலகத்  தமிழர்  பண்பாட்டு இயக்கத்தை 1974 இல் யாழ்ப்பாணத்தில்   ஆரம்பித்திருந்தார்.

தோடர்ந்தும் பல  ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைத்தார் “உலகத்தமிழர் குரல்”; பத்திரிகையின் ஆசிரியரான திரு கனகரத்தினம் அவர்கள் “சீசரின்தியாகம்” சிறுகதை “அலைகடலுக்கு அப்பால்” “உலகத்தமிழர்  ஐக்கியத்தை நோக்கி” “இறியூனியன் தீவில் எங்கள் தமிழர்கள்” “மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர்கள்” “ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்” “ஒரு நூற்றாண்டு(1890 -2011) இலங்கைத்தமிழர்  வரலாறுமைக்ரோ  பிலிம்களில் (நுண்படச் சுருள்களில்) முதலான பல வரலாற்று நூல்களைத் தந்ததுடன் தான்பங்கு பற்றிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளில் அவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன்   மொறிசியஸ்  பிரதமர் ராம்குலாம்  தமிழக முதல்வர்களான   எம்.ஜி.இராமச்சந்திரன்  ஆ.கருணாநிதி  போன்ற தலைவர்களால் கௌரவிக்கப் பட்டிருந்தார்.

அகில இலங்கை சமாதான நீதவான் திரு இரா கனகரத்தினம் அவர்கள் கண்டியில் உலகத் தமிழர் ஆவணக்காப்பகத்தை   நிறுவி தனது பணியை தொடர்ந்து வந்த காலத்தில் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு சில காலம் சிறையிலும் சிரமங்களையும் அனுபவிந்திருந்தார்.

இவரது சேகரிப்புக்கள்  கல்முனை கண்டி யாழ்ப்பாணம் கனடா நோர்வே சுவிஸ் போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 1996ல் கனடாவில் குரும்பசிட்டி நலன்புரி சபையினர் “ஆவணஞானி” என்ற பட்டமளித்து கொரவித்திருந்தனர்.

தனது சேகரிப்புகள் மைக்ரோ பிலிம்செய்யப்பட்டு அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படவேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நோர்வே அரச நிறுவனம் ஒன்று நிறைவேற்றியதால்  தனது சேகரிப்பான  உலகத்தமிழர் தகவல்களும் ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக  அடிக்கடி கூறுவார்.

தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்களின் பரிந்துரையில்  தமிழீழ ஆவணக்காப்பகத்தில்  பணிபுரிந்த போது நேரடியாக தமிழீழத் தேசியத்தலைவரின்  நன்மதிப்பைப் பெற்றவர்.

வரலாற்று நாயகன் ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திப்போம். இங்கே காணப்படும் படத்தில் கடந்த ஆண்டு சென்னையில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்திய கல்வி மாநாட்டில் அவருக்கு சிறப்புப் பட்டம் ஒன்றை துணைவேந்தர் பொன்னா வைகோ மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர்நாயகம் திரு துரை கணேசலிங்கம் ஆகியோர் வழங்குவதைக் காணலாம்

Leave a comment