தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

4188 49

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், வேட்பாளர் அறிமுகமும் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி பெற்றுக்கொண்டார்.

தேர்தல் பிரசார கீதத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் வி.எஸ்.சிவகரன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட முடியாதென வெளியேறியிருந்தது.

அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும், ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பென்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கி தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment