டிரம்ப் முடிவால் அதிர்ச்சி: அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது பாகிஸ்தான்

7983 0

பாகிஸ்தானிற்கு அளித்த நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது.

ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீப காலமாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில், கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது. பாக்.,கிற்கு இனி நிதியுதவி கிடைக்காது என குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி, தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலர் டெஹமினா ஜான்ஜூவா செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரத்தில் பணியாற்றி வரும் பாக்.கிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலேவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்

Leave a comment