தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை அதிகம்!

2138 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்யவேண்டிய சராசரி வடகிழக்கு பருவமழையின் அளவு 44 செ.மீ. ஆனால் பெய்த மழை அளவு 40 செ.மீ. எனவே 9 சதவீத மழை குறைந்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இயல்பான மழையை விட அதிகம் பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவை விட கூடுதலாக 42 சதவீதம் பெய்து இருக்கிறது.

11 மாவட்டங்களில் மழை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக பெய்திருக்கிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 சதவீதம் குறைவாக பெய்து இருக்கிறது.

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக பெய்ய வேண்டியது 79 செ.மீ., பெய்ததோ 94 செ.மீ. அதாவது 19 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மொத்த மழை அளவு 92 செ.மீ.. ஆனால் 97 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 6 சதவீதம் அதிகம். தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால் 41 செ.மீ. மழை பெய்து 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஒரே புயல் மற்றும் 4 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இன்னும் வடகிழக்கு பருவமழை காலம் முடியவில்லை.

அடுத்த 4 அல்லது 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும். கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றில் ஈரப்பதம் காணப்படுவதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment