சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிகாரிகள் இன்று நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழுவினர் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கடந்த முறை பணப் பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த முறையும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றதால், அதனை கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.