அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதன் பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.
வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண கோர்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு இந்த தடையை விலக்கி உத்தரவிட்டுள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்த தீர்ப்பினை, ‘அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கான கணிசமான வெற்றி’ என அரசு தலைமை வக்கீல் ஜெஃப் செஸ்ஸென்ஸ் கூறியுள்ளார்.