கனேடிய அரசு இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கவேண்டும்- கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை(காணொளி)

233 0

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரகூக்கு கனேடிய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னனிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன், யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களைத் தேடி உறவுகள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் எனவும் தெரிவித்த யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர், அவர்களுக்கு உரிய பதிலை அரசு இன்னும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவகையில் கனடா அரசு யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்யவேண்டும் என்றும் யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கனடாத் தூதுவரிடம் கூறினார்.

இதன்போது பதிலலித்த இலங்கைக்கான தூதுவர், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கிவருவதாகவும், தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment