வவுனியாவில் ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

4098 0

தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல்,

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்ல சூழலில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்கு அனுட்டிக்கப்படவுள்ளது.

குறித்த நினைவேந்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தேசம் எங்கும் மாவீரர் நாளை அனுட்டிப்பதற்காக தாயக மக்கள் தாமாகவே எழுச்சி கொண்டு நிற்கின்றனர். இந்தவேளையிலே, ஆட்சி மாற்றத்துக்குப்பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத்தனமான தற்போதைய அமைதி சூழலில் தேர்தல் அரசியலுக்காக இலாப நட்டக்கணக்குப் பார்த்து, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் முனைப்புக் காட்டி, மாவீரர் நாளை உரிமை கொண்டாடும் காரியங்களிலும், மாவீரரின் பெயரால் பணம் வசூலிக்கும் செயல்களிலும், மக்களின் நியாயமான உணர்வுகளை களவாடும் கருமங்களிலும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்கின்றோம்.

உயிர் அச்சுறுத்தல் நிறைந்த நெருக்கடியான கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர், பாசிச ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இந்த தேசியக்கடமையை பொறுப்பேற்று தலைமையேற்று நடத்த வேண்டியவர்கள், மக்களின் உணர்வுகளை ஒரு மையப்புள்ளியில் ஒருங்கிணைத்திருக்க வேண்டியவர்கள், மாவீரர்களை கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை செய்யாது அதிலிருந்து நழுவி ஓடி ஒளிந்துவிட்டு, தற்போது தேசியத்தலைவர் போலத் தம்மை கற்பனை செய்து – தம்மை உருவகப்படுத்தி, பொதுச்சுடர் ஏற்றுவதற்காக சந்தர்ப்பங்களை வலிந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் மனப்பிரமை வியாதி பீடித்துள்ள இவ்வாறான அரசியல்வாதிகளின் துர்நடத்தைகளை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிப்பதோடு, இந்த கயமைகள் தொடர்பில் விழிப்புநிலையுடன் இருக்குமாறும் தாயக மக்களை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வலியுறுத்துகின்றது.

‘மாவீரர் நாளை அனுட்டித்தால் மண்டையில் சுடப்படுவீர்கள்’ என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ அச்சுறுத்திய கடந்த ஆறு வருடங்களும், உரிமை கோராமல் அநாமதேய துண்டுப்பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் வெளியிட்டுவிட்டு மறைந்து கிடக்கும் அமைப்புகள் போல அல்லாமல், வவுனியா பிரஜைகள் குழு திறந்தவெளியில் பகிரங்கமாக உரிமை கோரி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுட்டித்து மாவீரர்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்தியே வந்திருக்கிறது.

இந்த வருட தொடக்கத்தில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழ் மக்களின் வழிபாட்டுக்கென்று பொதுநினைவுத்தூபியை அமைக்கும் பணியை ஆரம்பித்து, இதன் காரணமாக நீதிமன்ற வழக்கையும் வவுனியா பிரஜைகள் குழு எதிர்கொண்டுள்ளது.

நவம்பர் 27 அன்று வழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்ல சூழலில், ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள திருக்கோவிலில் (நினைவேந்தல் பாடல் இசைக்க) மாலை 6.05 க்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.

மாவீரத்தடம் பதிந்த மண்ணை நீறாக நெற்றியில் பூசும் புதிய தமிழ்மரபை உருவாக்குவோம்!

தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்தும் – மதிப்பளிக்கும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரர்களின் கால்கள் இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நீறாக நெற்றியில் பூசி விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் மாவீரத்தெய்வங்களை நினைந்துருகி வழிபடும் புதிய தமிழ்மரபை உருவாக்குவதற்காக ‘குப்பிகளில் அடைக்கப்பட்ட மண்’ தத்தமது இல்லங்கள் தோறும் எடுத்துச்செல்வதற்காக வழங்கப்படும்.

‘தமிழ் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.

கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்

தொடர்புகளுக்கு:
தலைவர், கோ.ராஜ்குமார் 0094 77 854 7440
செயலாளர், தி.நவராஜ்
ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா 0094 77 6699 093 (Viber)

Leave a comment