ஆவா குழுவின் உளவாளி வௌ்ளை வேனில் சென்ற பொலிஸாரால் கைது

276 0

ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ். இராமநாதன் வீதி கலட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கஜபாலசிங்கம் நிதர்சன் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் ஒன்றும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று (21.11) இரவு 8 மணியளவில் வெள்ளை வேனில் வந்த கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக வைத்து இளைஞரை பலாத்காரமாக கடத்திச் சென்றதாகவும், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நின்றவர்கள் இதனை கண்டுள்ளதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளை வேனில் வந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞரை வேனில் ஏறுமாறு தெரிவித்தபோது, இளைஞர் ஏற மறுத்ததை தொடர்ந்து, இளைஞனை பலாத்காரமாக வேனில் ஏற்றிச்சென்றதாக கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாரிடம் வினவிய போது, குறித்த இளைஞரை கடத்திச் செல்லவில்லை என்று தெரிவித்ததுடன், சிவில் உடையில் சென்ற பொலிஸார் அந்த நபரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

பல தடவைகள் சந்தேகநபரை கைது செய்ய முயற்சித்த போதிலும் சந்தேகநபர் தப்பிக்க முயற்சித்துள்ளதால், இம்முறை சிவில் உடையில் சென்று கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment