மனங்கள் இணையவில்லை என்பது சொந்த கருத்தா? தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

267 0

அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்பது தனிப்பட்ட கருத்து என்று கூறிய தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. நேற்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.

அதில், ‘ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று, நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?..’ என்று பதிவிட்டிருந்தார்.

இரு அணிகள் இணைந்தும், மனங்கள் இணையவில்லையே என்று பொருள்படும் வகையில் அமைந்த இந்த இரு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், இது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்து என கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியிருந்தார். இதற்கு மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.

‘நேற்று நான் எனது முகநூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்’ என மைத்ரேயன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று பேட்டி அளித்த பொன்னையன், இரு அணிகளின் மனங்கள் இணைந்தே உள்ளன என்று தெரிவித்தார். தொண்டர்களின் மனமும் ஒன்றாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். அனைவரும் ஒன்றாக இணைந்தே இருப்பதாக அமைச்சர் கடம்பூர்  ராஜு தெரிவித்தார்.

Leave a comment