கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் நேற்று முன்தினம் கலெக்டர், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டுக்குப்போக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதற்கான முன்னோட்டமாகத்தான் இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை கவர்னர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ, அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பா.ஜ.க.வின் பாணி இது போலும்.
தமிழகத்தில் இப்போது நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என்பதை கவர்னரின் ஆய்வு உறுதிப்படுத்துகிறது. ஜெயலலிதா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்கமாட்டார். மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அ.தி.மு.க.வின் கொள்கை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே கவர்னரின் ஆய்வு உணர்த்துகிறது. ‘நீட்’ தேர்வு முதல், தமிழகத்தின் நலன்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டிருக்கின்றன.இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

