கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் நிரந்தர கட்டிடம் கோரி கண்டனப் பேரணி

361 0

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகள் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்த தருமாறு கோரி இன்று(15) கண்டனப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனா்.

இன்று காலை பத்து மணிக்கு சந்தை வளாகத்திலிருந்து ஆரம்பமான கண்டனப் பேரணியானது மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு அரச அதிபருக்கு தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனா்.

இது குறித்து வர்த்தகர்கள் கருத்து தெரிவித்த போது

கிளிநொச்சி சந்தைக்கு 2011 ஆம் ஆண்டு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு 274 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நூறு மில்லியன் ரூபாவில் மீன் மரக்கறி கடைகளுக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டது. ஏனைய வியாபார துறைகளுக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு மிகுதியாக இருந்த 174 மில்லியன் ரூபா அன்றைய கரைச்சி பிரதேச சபையின் நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையே காணப்பட்ட அதிகார இழுபறி காரணமாக மீண்டும் திறைசேரிக்கு நிதி திருப்பி அனுப்பட்டது.

இந்த நிலையில் தற்காலிக கடைகளில் இயங்கி புடவை, அழகுசாதனம், பல்பொருள், தேனீர் கடைகள் என்பன கடந்த 16-09-2016 ற ஏற்பட்ட தீயினால் எரிந்து அழிந்த நிலையில் எமக்கான நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால்150 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் முதற்கட்டமாக 80 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, மிகுதி 70 மில்லியன் 2018 இல ஒதுக்கீடு செய்து தரப்படும் என்ற உத்திரவாதமும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மாடிகளை கொண்டு கட்டடத் தொகுதி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டு அதற்கு 767 மில்லியன் மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிதி 2018 அமைச்சரவையில் அனுமதிக்கு விடப்பட்டு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் அறிவித்தல் கிடைத்ததனை தொடர்ந்து ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 80 மில்லியனை வீட்டுத்திட்டத்திறகு பயன்படுத்தியிருக்கின்றாா்கள். இதனை வர்த்தகர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த 767 மில்லியனுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்காது விடின் தொடர்ந்தும் நாங்கள் தற்காலிக கொட்டில்களில் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும், சில வேளை அனுமதி கிடைத்தால் 2018 நவம்பர் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீ்டு செய்யப்பட்டு 2019 இல்தான் எமக்கு கிடைக்கும் ஆனால் கிளிநொச்சியை பொறுத்தவரை எமக்கு மாடிக் கட்டடத் தொகுதி கடைகள் பொருத்தமற்றது. எனவே வர்த்தகர்களாகிய எங்களால் ஏற்கனவே தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட மாதிரி வியாபார நிலையங்களுக்கான கட்டடங்களை அமைத்து தரவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை எனவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபா் வர்த்தகர்களின் கோரிக்கையை தான் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதாக குறிப்பிட்டாா்.

Leave a comment