இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார். இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் விசேடமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தில் எழுந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும், இடைக்கால அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளி விவகாரங்களுக்கான செயலாளரும், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், கடந்த வாரம் யாழில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அக்கட்சி பங்கேற்றிருக்கவில்லை.
இருப்பினும் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஏனைய பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்.உடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா அதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. இன்றுநடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிகளவு அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலும் இலங்கை தமிழரசுக்கட்சியானது முன்னதாக நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் சுரேஸ்பிரேமச்சந்திரனின் செயற்பாடுகள், கருத்துக்கள் தொடர்பில் அவதானித்து கருத் துக்களை முன்வைப்பதற்காக வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான குழுவொன்றை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.