ஆஸ்பத்திரி, பஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் அபராதம் ரத்து

368 0

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் பஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

சேலத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சமும், தனியார் பஸ் நிறுவனத்துக்கு ரூ.15 லட்சமும் சேலம் மாநகராட்சி சார்பில் அபராதமாக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம், தனியார் பஸ் நிறுவனம் சார்பில் சுந்தரேசன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், ‘அபராதம் விதிக்கும் முன்பு எங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் அதை சரிசெய்து இருப்போம். நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் அபராதம் விதித்தது சட்ட விரோதம். எனவே, அபராதத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும், அதுபோன்று அபராதம் விதிப்பது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மனுதாரர்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் அபராதம் விதித்தது சரியல்ல. எனவே, மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்துசெய்யப்படுகிறது.

அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மனுதாரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட முன் அறிவிப்பு நோட்டீசாக எடுத்துக்கொண்டு தங்களது வளாகத்தில் கொசு உற்பத்தி இல்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் பதில் மனுவாக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை என்றால் ஆய்வு மேற்கொண்டு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் மனுதாரர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை.

தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலின் தீவிரத்திற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே காரணம். நீர்நிலைகள், வரத்துக்கால்வாய்களை இஷ்டத்திற்கு ஆக்கிரமித்து கழிவுநீர் வெளியேற முடியாத அளவுக்கு குடியிருப்புகளையும், அடுக்குமாடி கட்டிடங்களையும், வணிக வளாகங்களையும் பலர் உருவாக்கி உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் மழைநீர் வெளியேறாமல் தேங்குகிறது என்று அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர். சில இடங்களில் அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்லமுடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். இதன் காரணமாக மழைநீர் தேங்கி, டெங்கு காய்ச்சலின் தீவிரமும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முழுகவனம் செலுத்த வேண்டும்.

சட்டத்தை மீறி பொதுமக்கள் நடந்துகொள்வது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் ஆங்காங்கு குப்பைகளை பொதுமக்கள் வீசிச் செல்கின்றனர்.

தமிழகம் கொசு உற்பத்தியை உருவாக்கும் மைதானமாகவும், தெருநாய், பன்றிகள், தெரு மாடுகள் உலாவும் விளையாட்டு மைதானமாகவும் உருவெடுத்து வருகிறது. கொசுவை ஒழிக்க தேவையான விழிப்புணர்வை உள்ளாட்சி நிர்வாகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment