வருமானவரி சோதனைக்கு ஓ.பி.எஸ் காரணம்: தங்க தமிழ்செல்வன்

7844 0

டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகளிலும், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதல் தான் காரணம் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகளிலும், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுவதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதல் தான் காரணம். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் எதுவும் நடக்காது.

ஜெயா டி.வி., புரட்சித் தலைவி அம்மா ஆரம்பித்த டி.வி. இதில் பெயர் வராதா? என்று ஏங்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று இந்த அலுவலகத்திலேயே வருமான வரித்துறையினரை ஏவி விட்டு சோதனை நடத்துகின்றனர்.

இவர்கள் அதிகார உச்சத்தில் மமதையுடன் செயல்படுகின்றனர். அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இவர்களை அம்மா ஆன்மா மன்னிக்காது.

கறுப்பு பணத்தை கண்டுபிடிக்க சோதனை நடத்துவதாக கூறும் வருமான வரித்துறையினர் மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் சோதனையிட்டபோது அங்கு டைரியை கைப்பற்றினார்களே, அந்த டைரியில் யார்-யார் பெயர் இடம் பெற்றுள்ளதோ அவர்கள் வீடுகளில் இதுவரை சோதனை நடத்தாதது ஏன்? என்பதை விளக்குவார்களா?

இதேபோல் கரூர் அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில் இதுவரை வருமான வரி சோதனை நடைபெறாதது ஏன்? என்பதையும் வருமான வரித்துறையினர் விளக்க வேண்டும்.எனவே உள்நோக்கத்துடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த சோதனையை நடத்துகிறார்கள்.இதற்கு காரணமானவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment