ரஷ்யாவின் போர்க் கப்பல் வேண்டாம் – ஜனாதிபதியின் மைத்துனர் எச்சரிக்கை

306 0

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரான ரொஹான் பல்லேவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மைத்துனரான பல்லேவத்த, இலங்கை இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் போர் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்ட நிலையில் அதிக விலைகொண்ட போர்க்கப்பல் அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இலங்கை கடற்படைக்காக, 158.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஜிபார்ட் 5.1 (Gepard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ரொஹான் பல்லேவத்த அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment