வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது

6010 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகையை முன்னிட்டு வட கொரியாவைச் சேர்ந்த 18 பேருடன் பண பரிவர்த்தனை மேற்கொள்ள தென் கொரியா தடை விதித்துள்ளது.

தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய தென் கொரிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் BAIK TAE-HYUN இதனைத் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் இருந்து வட கொரியாவுக்கு 18 பேர் மூலம், அதிக அளவில் அந்நிய செலாவணி வர்த்தகம் நடைபெறுவது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக BAIK TAE-HYUN கூறியுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம், வட கொரியாவுடன் பணபரிவர்த்தனையில் ஈடுபடும் விவகாரத்தில் தென் கொரிய மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் பொருளாதாரத்தை முடக்குவதே தங்கள் நோக்கம் எனக் கூறிய BAIK TAE-HYUN, இதன் மூலம், அந்நாட்டின் ஏவுகணைச் சோதனைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரியா வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தின்போது, வட கொரியாவின் ஏவுகணைச் சோதனைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்தும் தென் கொரிய தலைவர்களுடன் டொனால்ட் டிமர்ப் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment