வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என்றும், கடந்த கால அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என்றும் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. சென்னையில் பெய்து வரும் கன மழையால் மாநகரம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் 2015-ம் ஆண்டு போன்ற வெள்ள சேதத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
சென்னையைச் சுற்றி இருக்கும் ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளதால், பல இடங்களில் ஏரி உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உருவாகி உள்ளது. மழை, வெள்ள மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு மற்றும் மண்டல வாரியாக அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. எனினும் மிகுந்த காலதாமதமான நடவடிக்கையாகும்.
நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வடிகால் வாய்க்கால்கள் தூர் வாருதல், நீர் பிடிப்புப்பகுதிகளைக் கண்டறிந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் கவனம் செலுத்தவில்லை. 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களின் மூலம் தமிழக அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கி இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு மின்வாரியம் மட்டுமல்ல, தமிழக அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும். மாவட்ட வாரியாக மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றான வீராணம் ஏரி இரண்டு நாள் மழையால் நிரம்பி வழிகிறது. முறையாகத் தூர் வாரப்படாததால் வீராணம் ஏரியும் முழு கொள்ளளவுக்கு குறைவாகவே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது. விவசாயிகளை நீர் நிலைகளில் மண் எடுத்துக்கொள்ள அனுமதித்ததால் தான் ஓரளவிற்கு தூர் வாரும் பணிகள் நடந்துள்ளன.
ஆனால் இதற்காக அரசு சார்பில் 450 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறுவது எந்த அடிப்படையில் என்பதை முதல்-அமைச்சர் தான் விளக்கம் தர வேண்டும். சென்னை மட்டுமல்லாமல், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வெள்ளத் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

