விளையாட்டு திடல்களை வணிக மயமாக்குவதா? அன்புமணி கண்டனம்

244 0

விளையாட்டு திடல்களை வணிக மயமாக்குவதா? என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 17 பல்வகை பயன்பாட்டுக்கான விளையாட்டு அரங்கங்களும், 25 சிறிய விளையாட்டு அரங்கங்களும் உள்ளன.

அவற்றுக்கு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சென்று விளையாட அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடிந்தது.

ஆனால், இப்போது அனைத்து விளையாட்டுத் திடல்களையும் மக்கள் பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள கட்டண விகிதங்களின்படி மாநகர எல்லைக்குட்பட்ட இறகுபந்தாட்ட திடல்களை பயன்படுத்த தனிநபர்களுக்கு மாதம் ரூ.100 வீதம் ஆண்டுக்கு ரூ.1200 வரையும், மற்ற பகுதிகளில் மாதம் ரூ.300 வீதம் ஆண்டுக்கு ரூ.3600 வரையும் கட்டணம் செலுத்த வேண்டும்.

நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு மாதம் ரூ.250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் இது வசூலிக்கப்படுகிறது.

எனது தொகுதிக்குட்பட்ட தருமபுரியில் உள்ள விளையாட்டுத்திடலில் இறகுப்பந்து, குத்துச்சண்டை ஆகியவற்றுக்கான உள்விளையாட்டரங்கத்தை பயன்படுத்த பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.500, கல்லூரி மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.700, பொதுமக்களுக்கு ரூ.1000 வீதம் ஆண்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விளையாட்டுகளுக்கான வெளியரங்குகளை பயன்படுத்த குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை ஆண்டுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தை தனிநபர்கள் பயன்படுத்துவதற்கான ஆண்டுக் கட்டணம் ரூ.3,500 லிருந்து 87 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.6500 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கான ஆண்டுக் கட்டணம் 6000 ரூபாயிலிருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டுத் திடல்களைப் பயன்படுத்தக் கட்டணம் விதிக்கும் தமிழக அரசின் முடிவு அபத்தமானது.விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக கட்டணம் வசூலித்தால் திறமையும், ஆர்வமும் உள்ள துடிப்பான ஏழை மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெற முடியும்? இது அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை பொசுக்கி விடாதா?

நடைபயிற்சியும், நீச்சல் பயிற்சியும் மனித உடலை ஆரோக்கியமான பராமரிப்பதற்கான அடிப்படைத் தேவைகள் ஆகும்.இந்த அடிப்படைப்புரிதல் கூட இல்லாமல் நடக்கவும், நீச்சலடிக்கவும் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. அனைத்துக்கும் விலை நிர்ணயிக்கும் பழக்கதோ‌ஷம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

விளையாட்டுத் திடல்களை வணிகமயமாக்க அரசு முயலக்கூடாது. அபத்தமான இந்த முடிவைக் கைவிட்டு, விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்களில் இலவச பயிற்சியை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment