அமெரிக்கா: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்

477 0

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றிய மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

நேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் போலீசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மீண்டும் இங்கு அனுமதிக்க விடமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

Leave a comment