ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

266 0
பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 முக்கொம்பன் கிராமத்திலருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட மணல் டிப்பர்கள் பயணிப்பதன் காரணமாக கொங்கிறீட் வீதி சேதமடைவதாக பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் இணைத்தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் கிராம மக்கள் சார்பாக முறைப்பாடுகள் செய்தோம்.டிப்பர்கள் இனி மணலுடன் பயணிக்காது என உறுதிகள் வழங்கப்பட்டன.
ஆனால்  ஓராண்டு கடந்தும் தற்போதும் மணல் டிப்பர்கள் எமது கிராமம் வழியாகவே பயணிக்கின்றன. அக்கராயனுக்கும் எமது கிராமத்திற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் வீதி பெருங் குன்றுங்குழியுமாக மாறியுள்ள நிலையில் குறித்த கொங்கிறீட் பாதையாவது காப்பாற்ற வேண்டிய தேவை கிராம மக்களாகிய எங்களிடம் உள்ளது.
களவாக மணல் கொண்டு செல்வதற்கே எமது வீதி பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும் பூநகரி பிரதேச செயலாளருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
குடமுருட்டி, கண்ணகைபுரம், அக்கராயன் ஆற்றுப் பகுதிகளில் களவாக அகழப்படும் மணலே எமது வீதி வழியாக கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கு அக்கராயன், பூநகரி ஆகிய பொலிசாரின்  ஆதரவும் காணப்படுவதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே கிராம மக்களாகிய நாம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முக்கொம்பன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment