லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: மூன்றாவது நபர் கைது

3077 0

லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் காயம் அடைந்தனர்.

அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வேல்ஸ் பகுதியில் 25 வயது வாலிபர் பிடிபட்டதாகவும், தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தீவிரவாத எதிர்ப்பு படை கமாண்டர் டீன் ஹைடன் கூறுகையில், சுரங்க ரெயில் வெடி விபத்து தொடர்பாக 4 இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். இன்னும் சில தினங்களில் தேடுதல் பணி முடிவடைந்து விடும். வெடி விபத்து குறித்து முழு விவரமும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment