மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு (காணொளி)

437 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சித்தாண்டியில் அமைதி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டு ஆவணி மாத காலப்பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஞாபகார்த்த குழுவின் ஏற்பாட்டில், 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நினைவேந்தல் நிகழ்வும், அமைதி கண்டன போராட்டமும் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்றது.

1990 ஆண்டு ஆவணி மாத காலப்பகுதிகளில் வாழைச்சேனை, பேத்தாளை, மீராவோடை, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி ஆகிய கிராமத்தை சேர்ந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில், கிழக்கு மாகான விவசாய, கால்நடை, மீன்பிடி கூட்டுறவு அமைச்சர் கே.துரைராஜசிங்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் தமது கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து ஆலய முன்றலில் சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்களால், கிழக்கு மாகான விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

Leave a comment