நயினாதீவு-குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் இன்று 02/08/2017 முதல் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளார்கள்.மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையினை இலகுவாக வயது முதிர்ந்தவர்கள் முதல் யாவரும் சிரமத்திற்குள்ளாகாமல் பயணம் செய்யக்கூடிய விதமாக தரமான படகுகள் மூலமாக 30ரூபா கட்டணத்தில் காலை முதல் மாலை வரை 30நிமிடங்களிற்கு ஒருதடவை சேவை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை மூலமாகவும் நாளாந்தம் இரு தடவைகள் பாதை சேவையானது போக்குவரத்திற்கு பாரியளவிலான பங்களிப்பினை வழங்கிவருகிறது.
இவ்வாறிருக்க திடீரென நயினாதீவு-குறிகட்டுவான் சொகுசு படகு சேவையானது 3000ரூபா கட்டணத்தில் உரிய அனுமதி பெறாமல் சேவையில் தனியார் நிறுவனமொன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல பெரும்பாலான நயினாதீவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இப்படகு உரிமையாளர்களே வழங்கி வருகின்றார்கள்.அவர்களின் குடும்பங்களும் இதையே நம்பி வேலைவாய்ப்பில்லாத சூழலில் இடம்பெயராமல் நயினாதீவில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இத்தகைய நிலையில் சொகுசு படகு சேவை ஆரம்பித்துள்ளமை பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.இதனைக் கண்டித்தே நாளை முதல் பகிஸ்கரிப்பை தனியார் படகு உரிமையாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

