விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்படும் – சம்பந்தன்

271 0

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றுக் கொள்வதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால், வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரேவிற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன், வடக்கு முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்தவர்களுடன் இதுவிடயமாக தொடர்பில் இருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்வதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னதாக அறிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்துவதற்காக, விசாரணைகளில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் இந்த காலப்பகுதியில் அவர்களுக்கான வரப்பிரசாதங்களை தடையின்றி அனுபவிக்க முடியும் என்பதால், இது அவர்களுக்கான தண்டனை இல்லை.

அதேநேரம் அவர்கள் இந்த விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை தம்மால் வழங்க முடியாது என்று, இரா.சம்பந்தன் முந்திய கடிதத்தில் தமக்கு தெரியப்படுத்தியமையை புரிந்துக் கொள்ள முடிகிறது.

அதநேரம் குறித்த அமைச்சர்கள் விசாரணைகளில் குறுக்கிட கூடாது என்று அவர்களுக்கு அறிவுறை வழங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும், மதத்தலைவர்களும் இணங்கி இருக்கின்றனர்.

இந்த இணக்கப்பாட்டை கருத்தில் கொண்டு, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கான கட்டாய விடுமுறை என்ற விடயத்தை தாம் வலியுறுத்தப் போவதில்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அமைச்சர்கள் இருவரும், விசாரணைகளில் தலையிடப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டுக் கடிதங்களை வழங்க தயாராக இருப்பதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சிறிலசிறி சோமசுதந்திர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வணபிதா ஜஸ்டின் பெர்ணாண்டோ ஞானப்பிரகாசம் ஆகிய மதத்தலைவர்களால், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான 3 பரிந்துரைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி விசாரணை அறிக்கையின்படி குற்றச்சாட்டில் இருந்து விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களும் தங்களது கடமைகளை மீளப்பொறுப்பேற்க அனுமதிப்பதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சுயாதீமான விசாரணை செய்ய குறித்த அமைச்சர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அத்துடன் வடமாகாண சபையை திறம்பட செயற்பட சகலரும் ஒத்துழைப்பதுடன், முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெறவும் மதத்தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

மதத்தலைவர்களின் இந்த பரிந்துரைகளையும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கடிதத்தையும் அடிப்படையாக கொண்டு, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமது கடிதத்தில் அறிவித்துள்ளார்.

அத்துடன் சுதந்திரமானதும், சட்டப்பூர்வமானதுமான எந்த விசாரணைக்கும் இடையூறு செய்யக்கூடாது என்று, சம்மந்தப்பட்ட அமைச்சர்களை தாம் வலியுறுத்துவதாகவும் சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a comment