தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்களில் ஆய்வு

261 0

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் மத்திய அரசு குழு ஆய்வு நடத்தவுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஜெ.அன்பழகன் (தி.மு.க.) பேசும் போது, ‘‘மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அமையும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோரிக்கை வைப்பதால் அந்த குழப்பத்துக்கு அமைச்சரின் பதில் தீர்வாக அமையும் என்றார்.

இதற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தார். மத்திய அரசின் கொள்கை என்னவென்றால் வளர்ந்த மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படாது என்றும், வளர்ச்சி அடையாத மாநிலங்களில்தான் கொண்டு வரப்படும் என்ற கொள்கை உள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அம்மா எடுத்த முயற்சியின் காரணமாக இதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மத்திய அரசு கூறி இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் இடம் அவசியம் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அதன் அடிப்படையில் அரசு செயலாளர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் பேசி இறுதியாக செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினர். அதன் பிறகு மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வுக்கு அனுப்பியது.

இப்போது கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் மாவட்டத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள் உள்ளது என்று கேட்டுள்ளனர். முதல்- அமைச்சரின் நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். அது எந்த மாவட்டத்துக்கு வந்தாலும் பரவாயில்லை என்பதுதான்.

மாநில அரசை பொருத்த வரை எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மத்திய அரசு எந்த விவரம் கேட்டாலும் மாநில அரசு உடனே அனுப்பி வைக்கிறது. எனவே மாநில அரசில் எந்த தொய்வும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment