புத்தளம் விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் காயம்

9 0

புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் .

சம்பவம் தினத்தன்று குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன்  மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவ்விருவரும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்பட்டதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை (31)  உயிரிழந்துள்ளார்.

நுரைச்சோலை – கொய்யாவாடி , அரபா நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முஹம்மது நிஜாம் முஹம்மது சன்பர்கான் (வயது 28) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.