புராதன பெறுமதிமிக்க புத்தர் சிலை ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்களை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையில் தேரர்கள் தங்கியிருக்கும் ஆவாசப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்று கடந்த 28 ஆம் திகதி இரவு, கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நால்வர் விகாரைக்கு அன்றைய தினம் இரவு வந்துள்ளனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை அடி உயரமான தங்க நிறத்திலான புத்தர் சிலையை, ஒரு விசாரணைக்காகத் தேவைப்படுவதாகக் கூறி தேரர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் நேற்று (31) மாவத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வேன் ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் நீர்கொழும்பு, தெல்தெனிய, மொனராகலை, மத்துகம, மாத்தளை மற்றும் ரிதீகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் பிலஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

