நீலகிரியில் எத்தனை தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல்?

12 0

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்படும் எத்தனை ஹோம் ஸ்டே தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலில் உள்ள அனைத்து Home Stay தங்கும் விடுதிகளையும் ஆய்வு செய்ய, மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

இக்குழுவினர் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து, அவை உரிய கட்டிட அனுமதி பெற்றுள்ளனவா? சுற்றுலாத் துறை உரிமம் பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த ஆய்வில், உரிய அனுமதிகளை பெறாத சட்டவிரோத தங்கும் விடுதிகளை எதிராக உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணை வந்தபோது, வனத்துறை சார்பாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, இதுவரை நீலகிரி மாவட்டத்தில் விதிமுறை மீறிய சுமார் 920 ஹோம் ஸ்டே தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டு நிலை அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை ஏன் எடுப்பது இ்ல்லை என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்து அன்றைக்கு எத்தனை ஹோம் ஸ்டே (Home Stay) விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.