ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் ; 5 வது நாளாக இடம்பெற்றது

11 0

தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தமக்கு, ஆசிரியர் சேவையில் முறையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஜனவரி 26 ஆம் திகதி முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புகளும் போராட்டக்களத்துக்கு வந்து எமக்கு ஆதரவாக நின்ற போதிலும், அரச தரப்பினர் எம்மைப் பொருட்படுத்தவில்லை என்றும், இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது ஆசிரியர் பணிக்கான தகுதிகள் இருந்தும், தங்களைத் ‘அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்’ என்ற வரையறைக்குள் வைத்திருப்பது அநீதியானது எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் “தேர்வு மூலமே நியமனம் வழங்கப்படும்” எனப் பிடிவாதமாக இருப்பதால், இந்தப் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும், தமது நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை களத்தை விட்டு நகரப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் நேற்றும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஒருவர் மாத்திரம் தொடர்ந்து இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதுடன், ஏனையோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகவே உள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் தொடர்பில் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க தெரிவிக்கையில்,

“சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கக்கூடிய அதே வாய்ப்பு, ஏழு வருடங்களாகப் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? பட்டதாரிகளுக்கு அரசாங்கம் புதிய பாடத்தொகுப்பு முறையில் ஆசிரியர் பயிற்சிகளை வழங்கி, அதற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.

இவர்கள் ஆசிரியர்கள் இல்லை என்றால், எதற்காக இவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிகளை வழங்கிப் பொதுப்பணத்தைச் செலவிட்டீர்கள்? இது மோசடியல்லவா? புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் மாணவர்களுக்குப் பரீட்சைகள் சுமையெனக் கூறி அவற்றை நீக்கும் அரசாங்கம், அனுபவமிக்க ஆசிரியர்களை உள்வாங்க மட்டும் பரீட்சையை வலியுறுத்துவது ஒரு ஏமாற்று வேலையாகும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் போராட்டத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்காவிடின், அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்குப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம். கடந்த காலங்களில் ஆசிரியர் நியமனத்திற்காகக் குரல் கொடுத்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது அதிகாரத்திற்கு வந்தவுடன் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்” என்றார். அத்தோடு நேற்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துத் தமது பிரச்சினைகளைத் தெரிவித்திருந்தனர்.