அமெரிக்காவை தாக்கப்போகும் கடும் பனிப்புயல்: பல மாகாணங்களில் அவசரநிலை

11 0

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கடும் குளிர் அமெரிக்காவை தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

அமெரிக்க வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் உருவாகும். இதனால், மழை மற்றும் கடும் பனி இணைந்து உறைபனி மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீண்ட நேர மின் தடைகள் ஏற்படலாம், அதிக அளவில் மரங்கள் முறிந்து விழலாம், மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம்.

நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூ மெக்ஸிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும். மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை இது தாக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து, டெக்ஸாஸ் உட்பட பல்வேறு மாகாணங்களில் 2,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிளைட்வேர் ட்ராக்கர் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, மின்கட்டமைப்பு செயலிழந்தது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். எனினும், அப்படி ஒரு நிலை தற்போது வராது என்றும் தற்போது மின் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியரசு கட்சியைச் சேர்ந்த டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட், ‘‘மின் கட்டமைப்பு முன்பைவிட வலிமையாக உள்ளது. முன்பைவிட அதிக தயார் நிலையில் உள்ளது. குளிர்கால புயலை எதிர்கொள்ளும் முழு திறனைக் கொண்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

எனினும், டெக்ஸாஸ் பல்கலைக்கழகப் பொறியியல் பேராசிரியர் மைக்கேல் வெபர், ‘‘உறைபனி நாடு முழுவதற்கும் ஒரு பெரிய அபாயமாக உருவெடுக்கும். உதாரணமாக பனி, மரங்களின் மீது குவிந்து மரத்தை முறிக்கும். இதனால், மின்சார கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நேரும்போது மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

பனிப்புயலை முன்னிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல், “கடும் குளிர் நிலவும்போது மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் வெளியே வந்தால்கூட அது உங்கள் உடல் நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

தண்ணீர் வரும் குழாய்கள், ஹீட்டர்கள் ஆகியவற்றை நன்கு பராமரித்தல் முக்கியம். மேலும், அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருங்கள்’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

நியூயார்க் நகர மேயராக புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு இந்த பனிப்புயல் புதிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. பனி காரணமாக, பல பகுதிகளில் வரும் திங்கள் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த கூடைப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தேதி மாற்றப்பட்டுள்ளன.

பனிப்புயலுக்குப் பிறகு ஏற்படும் கடுங்குளிர் ஒரு வாரம் வரை நீடிக்கும் என்றும் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வடக்கு சமவெளிகள் மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் -46.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிரின் அளவு தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 16 மாகாணங்கள், தலைநகர் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல நகராட்சிகளில் முகாமகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள், பல்பொருள் அங்காடிகளில் இருந்து பொருட்களை வாங்கிக் குவித்து வருவதால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் செவ்வாய்கிழமை வரை பனிப்புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.