சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன

20 0

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளைப் பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில்   தற்காலிகமாகத் தடுத்து வைக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை   அதிகரித்துள்ளதால்  சகல  சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன என்றார்

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (20) அன்று இடம்பெற்ற  வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய  கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 699 சிறைக் கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல, தும்பர ஆகிய சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையின் புதிய நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தி தற்போது சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய தும்பர சிறைச்சாலையைப் புனரமைப்பதற்கு  4363 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில்  போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இந்த இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சகல  சிறைச்சாலைகளும்  நிரம்பி வழிகின்றன  .

அரச இரசாயன பகுப்பாய்வாளர்  சேவையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறையினால் போதைப்பொருள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்படுவதனால் சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, அரச இரசாயன  பகுப்பாய்வாளர் சேவைக்கு 52 பேரைப் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 32 பேரைச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.