கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தின் தொலைநோக்கு சிக்கல்களையும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் எனும் காரணங்களுக்காக என்று முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3ம் தேதி (03-12-2025) வழங்கப்பட்டது.
நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும். இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை (CRZ Notification 2019, Annexure-IV) படி, மீன்பிடி இடங்கள் (பாடு) தெளிவாக வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்திற்கான அனுமதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் “வெற்று நிலம்” (Vacant Land) எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. உப்பங்கழிகளில் காலம் காலமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மற்றும் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதார உரிமையை இத்திட்டம் பறிக்கிறது.
மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாயின் போக்கை மாற்றுவது மழைக்காலங்களில் நீரோட்டத்தைத் தடுத்து, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. நெடுங்கால சீரழிவுகளில், கடலோடு கால்வாய் கொண்டுள்ள இயற்கை தொடர்பைத் துண்டிப்பது, கடல்சார் சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும்.

