செயற்கைக்கோள் காட்டிக்கொடுத்த இலங்கையின் ஆபத்துகள்

40 0

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார்.

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் நிழற்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, மண்சரிவு பின்னரான தரைத்தோற்ற வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக குமாரி மிகஹகொடுவ குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள் நிழற்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டதாக கூறியிருந்தது.

இந்த நிலையில், மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அணுகல் வசதிகளை கொண்ட இடங்களை மாத்திரம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்டிருக்கலாம் என குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் நிழற்படங்களில், காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகளின் எண்ணிக்கைகளும் கணக்கிடப்பட்டுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ சுட்டிக்காட்டியுள்ளார்