97 வர்த்தகர்களுக்கு 02 இலட்சம் ரூபாய் அபராதம்

15 0

அம்பாறை மாவட்டத்தில் கடந்த  2025  ஆம்  ஆண்டு    டிசம்பர்   மாதம்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வந்த  97  வர்த்தகர்களுக்கு  நீதிமன்றங்களினால்  02  இலட்சத்து  59 ஆயிரத்து  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக,  பாவனையாளர்  அலுவல்கள்  அதிகார  சபையின்  அம்பாறை  மாவட்ட  பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார  நவரத்ன ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.

கல்முனை,  அக்கரைப்பற்று, சம்மாந்துறை,  பொத்துவில்,  அம்பாறை,  தெஹியத்தக்கண்டி  ஆகிய நீதிமன்றங்களின்  நியாயாதிக்கத்திற்குட்பட்ட  பிரதேசங்களில்  மாவட்ட  அரசாங்க  அதிபர்  சிந்தக்க  அபேவிக்கிரமவின்  அலோசனைக்கமைய  பாவனையாளர்  அலுவல்கள்  அதிகார  சபையின்  புலனாய்வு  உத்தியோகத்தர்கள்  தொடர்ச்சியாக  மேற்கொண்ட  திடீர்  சுற்றிவளைப்புகளில்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்ட  101  வர்த்தகர்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

இவ்  வர்த்தகர்களுக்கு  எதிராக  நீதிமன்றங்களில்  வழக்கு  தாக்கல்  செய்யப்பட்டடு,  இதில்  97  வர்த்தகர்களுக்கு  02 இலட்சத்து  59 ஆயிரத்து  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாகவும்  ஏனைய  வர்த்தகர்களுக்கு  வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

அரசாங்கத்தால்  நிர்ணயிக்கப்பட்ட  விலையை  விட  கூடுதலான  விலைக்கு  அத்தியாவசிய  பொருட்களை  விற்பனை  செய்தமை,  நுகர்வோர்  நலன்  கருதி  வர்த்தக  நிலையங்களில்  விலைப்பட்டியலை  காட்சிப்படுத்தாமை,  நுகர்வுக்குப்  பொருத்தமில்லாத  பொருட்களை  காட்சிப்படுத்தியமை,  காலவதியான  பொருட்கள்  மற்றும்  தரமற்ற  பொருட்களை  விற்பனை  செய்தமை  போன்ற  நடவடிக்கைகளில்  ஈடுபட்ட  வர்த்தகர்கள்  சுற்றிவளைப்பின்  போது  கண்டு பிடிக்கப்பட்டு  வர்த்தக  நிலையங்களின்  உரிமையாளர்களுக்கு  எதிராக  நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்ததாகவும் கூறினார்.

அத்தியாவசிய  பொருட்களை  கூடுதலான  விற்பனை  செய்யும்  வர்த்தகர்கள்  தொடர்பாக  பொது மக்கள்  1977ம்  இலக்கத்திற்கு  அல்லது  மாவட்ட  நுகர்வோர்  அதிகார  சபையின்  0632222355  எனும்    தொலைபேசி  இலக்கத்திற்கு  தகவல்களை  வழங்குமாறு  அறிவித்துள்ளார்.