அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 97 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 02 இலட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.
கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, தெஹியத்தக்கண்டி ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவின் அலோசனைக்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 101 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டடு, இதில் 97 வர்த்தகர்களுக்கு 02 இலட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வர்த்தகர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் சுற்றிவளைப்பின் போது கண்டு பிடிக்கப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை கூடுதலான விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக பொது மக்கள் 1977ம் இலக்கத்திற்கு அல்லது மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் 0632222355 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அறிவித்துள்ளார்.

