காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவியை கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (15.12.2025) மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக நேற்று(14) இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு சென்று சம்பவ தினமான இன்று காலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார்.
இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாறிய நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் தலையை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து, தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

