போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் முறைப்பாடு அளிப்பதற்காக ஒரு புதிய பொது இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.
road-lk.org என்ற இணையத்தள முகவரி ஊடாக குறித்த இணையதளத்திற்குப் பிரவேசிக்க முடியும்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக வீதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, இந்த புதிய முறைமை ஒரு பரீட்சார்த்த திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் நிரந்தரமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வீதி சேதம், மூடல்கள், விபத்துகள் மற்றும் நடைமுறையில் உள்ள திருத்தங்கள் போன்றவற்றை மக்கள் குறித்த நேரத்தில் (Real-time) முறைப்பாடு அளிக்க இந்த தளம் அனுமதிக்கிறது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில், “இந்த தளம் வீதிப் பிரச்சினைகள் குறித்த உடனடி தகவல்களைச் சேகரிக்க உதவுகிறது” என்று குறிப்பிட்டார்.
முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டுடன் தொடர்புடைய புகைப்படங்களைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்க்கப்பட்ட பின்னர், அந்தப் பிரச்சினைகள் தேசிய வீதி வரைபடத்தில் (National Road Map) குறிக்கப்படும். மாகாண வீதி அதிகாரசபைகளுக்கும் இந்தத் தரவை அணுகுவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

