“அதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே பழனிசாமியின் நோக்கம்” -புகழேந்தி

26 0

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் பெங்களூரு வா.புகழேந்தி. அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களையும் ஏற்கக் கூடாது என ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.

Q

பழனிசாமிக்கு எதிராக நீங்கள் போடும் மனுக்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத போதும் எந்த நம்பிக்கையில் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறீர்கள்?

A

எனது மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை முன்வைத்து நான் தொடுத்த அவமதிப்பு வழக்கை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர் களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். ஜனவரியில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனது கடும் உழைப்பு வீண் போகவில்லை.

Q

அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ன செய்கிறது..?

A

ஒருங்கிணைப்பு குழு மூலம் கடிதம் எழுதினோம்; பேசிப் பார்த்தோம். சசிகலாவும் தினகரனும் இனி சந்திப்பதாக தெரியவில்லை. ஓபிஎஸ் பாஜக-வை விட்டு வெளியே வரமாட்டார். பழனிசாமி ஹிட்லரை போல இணங்காமல் இருக்கிறார். ஒருங்கிணைப்பு குழு அப்படியே இருந்தாலும் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.