ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மலைக்குன்றில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகராக ஓசூர் உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நகராட்சியாக இருந்த ஓசூர் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நகரில் குடிநீர், சாக்கடை கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலையுள்ளது.
இந்நிலையில், ஓசூர் 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மற்றும் காலகுண்டா மலைக்குன்று பகுதியில் அடிப்படை வசதிகளின்றி கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் பரிதவித்து வருவதாகவும், குறிப்பாக மலைக்குன்றின் உயரத்தில் உள்ள 25 வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக பார்வதி நகர் மலைக்குன்று மீது 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை.

