பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

13 0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம்  தவணையின் இரண்டாம் கட்டம் 2025.12.16 முதல் 2025.12.22 வரை நடைபெறும் என்றும், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு 2025.12.29 முதல் 2025.12.31 வரை மீண்டும் தொடங்கும் என்றும், முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02 வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டு, மாணவர்களை அடுத்த தரத்திற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய 11ஆம் தரத்திற்கு மாத்திரம் முன்னோடி பரீட்சை பரீட்சை நடாத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை ஜனவரி ஐந்தாம் (5) ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது.

நாட்டை பாதித்த பேரிடர் சூழ்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள அனைத்து பாடங்களும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே கூறியுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், அவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்ல அவர்களின் தகவல்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.