அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்துள்ளனர். தாக்குதலின்போது அந்த நபரும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியை ‘மிருகம்’ என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், “காயமடைந்திருந்தாலும், அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்,” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை பாராட்டியுள்ள ட்ரம்ப், இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே, ரஹ்மானுல்லா முதலில் அங்கிருந்த பெண் காவலரின் மார்பிலும், தலையிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்றொரு காவலரையும் நோக்கிச் சுட்டிருக்கிறார். இதனைக் கண்ட அருகில் இருந்த இன்னொரு காவலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைச் சுட்டு வீழ்த்தியுள்ளார்.
இதில் ரஹ்மனுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 29 வயதான அவர், கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என கூறப்படுகிறது.

