ஆலந்தூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க முயல்வதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஆலந்தூர் அய்யப்பந்தாங்கல் பரணிபுதூர் கல்லூரி சாலையில் இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடித்துவிடுவேன் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டல் விடுக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அன்னை தெரசாவால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 400-க்கும் மேற்பட்ட முதியோர் பயன்பெற்று வரும் நிலையில், அதை இடித்துவிடுவேன் என ஓர் அமைச்சரே மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
முதியோர் இல்லத்தைச் சுற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ள தனியார் கட்டுமான பெரு நிறுவனம், முதியோர் இல்லத்தை இடித்து அதன் வழியாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயல்வதாகவும், அதற்கு அமைச்சர் துணை நிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் பெரு முதலாளிகளின் லாப நோக்கத்துக்காக, முதியோர் இல்லத்தை முடக்குவது ஏற்புடையதல்ல. திமுக அரசு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதை கைவிட்டு, ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

