அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்த ஒருவரை சனிக்கிழமை (15) பகல் மட்டு காந்தி பூங்காவுக்கு முன்னாள் வீதியில் வைத்து மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டதுடன் 1900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை (15) பகல் காந்தி பூங்காவுக்கு முன்னாள் கன்டர் ரக வாகனம் ஒன்றில் 3 பரல்களில் தேங்காய் எண்ணையை வியாபாரத்துக்காக எடுத்து வந்த வாகனம் காத்து நின்ற போது மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களான எம்.தேவநேசன், என்.விமலசேன ஆகியோர் குறித்த வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
இவ்வாறு கைது செய்தவர் மற்றும் வாகனத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பகுதியில் உள்ள மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்கள் பணிமனைக்கு கொண்டு சென்று அங்கு பரிசோதனை செய்த போது அது மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணை என கண்டறியப்பட்டது.
குறித்த எண்ணெய் அனுராதபுரம் பகுதியிலுள்ள பெரிய உல்லாச விடுதிகளில் சமையலுக்கு பாவித்த எண்ணெயை பெற்று அதில் கொத்தமல்லி மற்றும் புதிய தேங்காய் எண்ணையை கலப்படம் செய்து புதிய எண்ணைய் போல நிறத்துக்கு மாற்றி அதனை புதிய எண்ணை வடிவமாக்கி விற்பனை செய்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

