அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் பலி!

29 0

புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில், விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை (11) அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து சிறிய ரக விமானத்தில் இருவரும் பயணித்துள்ளனர்.

53 வயதுடைய தந்தையான அலெக்சாண்டர் விமானத்தை செலுத்திய நிலையில், அவ்விமானம், புளோரிடாவின் கரோல் ஸ்பிரிங் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் அலெக்சாண்டர் மற்றும் அவரது மகள் செரினா (22) இருவரும் உயிரிழந்தனர்.

ஜமைக்காவில் கடந்த 28ஆம் திகதி மெலிசா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பலரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான ரீதியாக உதவிகளை அமெரிக்கா வழங்கி வரும் நிலையில், அங்குள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த தந்தையும் மகளும் நிவாரணப் பொருட்களுடன் ஜமைக்காவை நோக்கி பயணித்தனர்.

பயண நடுவிலேயே விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர். இவ்விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.