ஆசிய கிண்ணம் இந்தியாவுக்கு வழங்கப்படுமா?

35 0

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டுபாயில் நடந்த ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டி உட்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரான மொசின் நக்வி ஆசிய கிரிக்கெட் சபைத் தலைவராக உள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அமைச்சராக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கிண்ணத்தை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.

இதனால் நக்வி ஆசிய கிண்ணத்தை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு ஆசிய கிண்ணத்தை வழங்க ஆசிய கிரிக்கெட் சபை தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.