வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனும் , அவரது நண்பரும் கொழும்பில் இருந்து முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறியுடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றைய இளைஞன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

