போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துஸ்லாவில் உள்ள அந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், இதற்கான காரணம் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
போஸ்னியா ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வளாகத்தின் மேல்தளங்களில் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் அடங்குவதாகவும், நிலைமையை மதிப்பிடுவதற்காக நேற்று புதன்கிழமை (05) அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாக துஸ்லா மேயர் ஸிஜாத் லுகாவிக் தெரிவித்தார்.
அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கும் ருசா காஜிக் என்ற பெண், தூங்கச் சென்ற போது “வெடிக்கும் சத்தங்கள்” கேட்டதாகவும், மேல்தளங்களிலிருந்து தீப்பிழம்புகள் விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

