வத்தளையில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது

24 0

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) காலை ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போது, 1 கிலோ கிராம் 48 கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹெந்தலை, பள்ளியவத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை மேலும் விசாரணைக்குட்படுத்தியதில், வத்தளை டோனி மாவத்த பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்தியபோது, 797 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹெந்தலை, வத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வத்தளை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.