ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று வியாழக்கிழமை(09) மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு ஆகியவற்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இதன் போது காற்றாலை தொடர்பான எமது பிரச்சனையை அவரிடம் முன் வைத்தேன். இந்த விடயம் குறித்து கதைத்த போது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றால் அவர்கள் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கின்றார்கள்.
நான் அங்கு எந்தவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. நான் மக்களின் நிலைப்பாட்டையும், மன்னாரில் ஏன் காற்றாலை வேண்டாம் என்று மக்கள் கூறுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தினேன்.
எனினும் அவருடைய நிலைப்பாடு என்னவென்றால் குறித்த 14 காற்றாலை களையும் அமைத்ததன் பின்னர் மன்னாரில் கனிய மணல் அகழ்வையோ அல்லது மேலதிக காற்றாலைகளையோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை என்ற வாக்குறுதியை வழங்கினார்.
கணிய மணல் அகழ்வு மன்னாரில் முற்றாக இல்லை என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை ஊடாக அதனை எமக்கு உறுதிப்படுத்தி தருவதாகவும் குறித்த 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதிக்கின்ற போது எந்த ஒரு அரசாங்கமும் இச் சிறிய பகுதியில் கணிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை. அதற்கும் அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவேன் என கூறினார்.
எது எப்படியாக இருந்தாலும் நான் மன்னாரில் மக்களை சந்தித்ததன் பின்னர் இதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து வந்தேன். நாங்கள் எவ்வித ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.

